Friday 25 September 2015

எப்போது வேண்டும் எது

......................................
1.
பேசா மௌனம் கொள் - உன் 
பெரிதாம் வாழ்வை இறை நோக்கும்
பேசா மௌனம் கொள் - உன்
பின்னால் ஞானத்தொளி தோன்றும்
‘பேசா மௌனம் கொள் - உன்
பிறழ்வும் முரண்வும் பலியாகும்
பேசா மௌனம் கொள் - உனைப்
புகழும் பெருமை தேடிவரும்

பேசா மௌனம் கொள் - உன்
புலமை ஆற்றல் பரந்துவிடும்
பேசா மௌனம் கொள் - உன்
பிழைகள் புரிந்தே வழிகாண்பாய்
பேசா மௌனம் கொள் - அந்தப்
பெரிதாமொளியும் உனில்சேரும்
பேசா மௌனம் கொள் - உன்
பிறவி பயனென் றறிவாய் காண்

2.
வேண்டும்போதே சொல் - விட்டால்
வினைகள் முற்றிக் கலியோங்கும்
வேண்டும்போதே சொல் - விட்டால்
விலகும்நேர்மைவிதி சாடும்
வேண்டும்போதே சொல் - விட்டால்
விட்டேமதியும் உறங்கும் காண்
வேண்டும்போதே சொல் - விட்டால்
விவரம் அறியாப் பகைகூடும்

வேண்டும்போதே சொல் - விட்டால்
வீணாய் பழிகள் உனதாகும்
வேண்டும்போதே சொல் - விட்டால்
வீழ்ச்சிக் கேதாய் மதிசோரும்
வேண்டும்போதே சொல் - விட்டால்
விளைவோ நடைகொள் பிணமாவாய்
வேண்டும்போதே சொல் - விட்டால்
‘வீடும் தள்ளக் காடேற்கும்

3.
பேசிக்கொண் டெழுவாய் - உன்
பேச்சில் உதயத்தொளி் காணும்
பேசிக்கொண்டெழுவாய் - உனைப்
பார்த்தே யுலகம் துயில் நீங்கும்
பேசிக்கொண் டெழுவாய் - உன்
மூச்சில் உணர்வே மொழிகூறும்
பேசிக்கொண் டெழுவாய் - உன்
பேச்சும் மேலாம் சபையேறும்

பேசிக்கொண் டெழுவாய்- உன்
பேச்சின் உண்மை வலுசேர்க்கும்
பேசிக்கொண் டெழுவாய் - உன்
பேச்சின தீரம் பகை வெல்லும்
பேசிக்கொண் டெழுவாய் - உன்
பேச்சின் உண்மை அணிசேர்க்கும்
பேசிக்கொண் டெழுவாய் - உன்
வார்த்தை சுதந்திரப் பரிசீயும்

********************************
சாரம் :
(பேசாதிரு ஆனால் தேவைப்படும்போது பேசாமல் இருக்காதே!)

No comments:

Post a Comment