Friday 25 September 2015

மனம் ஒரு குரங்கு



எத்தனை ஆண்டுகள் பித்தனுடன் யானும்
இப்படி வாழ்ந்திடுவேன் - விழி
பொத்தியதாய் இவன் போகும் வழிகண்டு
பொல்லாத் துயரடைந்தேன்
சத்தியம் என்றொரு பத்தியம் உண்டென்று 
சற்று எடுத்துரைத்தேன் - இவன்
புத்துல கென்றொரு அர்த்தமில்லாவழிப்
போக்கினைக் கையெடுத்தான்

வைத்த காலில் முள்ளு தைக்கு தையோவென
எத்துணை சத்தமிட்டேன் - இவன்
சித்தியற்ற வழி நட்ட நடுக் காட்டில்
சென்றலைந்தே சிதைந்தான்
மெத்தப் படித்தவன் என்றொரு போதையை
முற்றும் தலைக்கெடுத்தே - இவன்
நித்தம் நெஞ்சமழ நீரும் விழிகொட்ட
நஞ்செனு மெண்ணமிட்டான்’

சித்தம்மறுகியோன் செய்கலைவண்ணத்தில்
சித்திரம் ஒன்றெழுதிப் - பின்னே
வைத்த எழிலுரு மீது குற்றுமிட்டு
வாழ்வழகைக் கெடுத்தான்
பத்துகுணங்களும் கொண்டவனாய் உடல்
பக்குவம் தான் கெடுத்தே - காணச்
சொத்தெனக் குப்பையும் சேர்த்து மகிழ்வொடு
மெத்தையென்றே கிடந்தான்

கொத்துமலர் கொண்டோர் சோலை பக்கமுண்டு
கூடிநடப்போ மென்றேன் - இவன்
சித்தம்பிளறியே சுந்தரப் பூங்காவைச்
சொத்தையென மறுத்தான்
புத்தம் புதுக் காலை புன்னகை கொள்ளெனப்
புத்தியெடுத் துரைத்தேன் - விட்டே
செத்தேயெரி சுடுகாட்டினைக் கண்டதும்
சென்றங்கு தூங்குகிறான்

வித்தையில்லை ஒரு முற்றும் வலிமைகொள்
விண்ணெழில் மேகத்தப்பால்
நித்தியமாய் ஒளி நிற்குதே எண்ணென்று
நற்செயல் நானுரைத்தேன்
அத்தனைதூர மிருந்தெமை ஆளுமச்
சக்தியை ஏன் மறந்தான் - சொல்ல
எத்தன் விழிமூடி நித்திரைபோலங்கு
ஏனோ பாசாங்கு செய்தான்

No comments:

Post a Comment